சீதையும், ராமனும் விமானத்தில் அயோத்திக்குக் கிளம்பினர்.கூட வானர வீரர்களும், விபீஷணன் போன்றோரும் சென்றனர்.ஆகாயத்தில் போய்க்கொண்டிருக்கையில் ராமன், தானும், லட்சுமணனும் என்றும் மறக்கமுடியா இடங்களை சீதைக்குச் சுட்டிக் காட்டிக்கொண்டு வந்தான்."அதோ பார்..நான் உன்னையடையவே நளன் கட்டித் தந்த சேது.அதோ கிஷ்கிந்தை.ஹனுமானையும், சுக்ரீவனையும் நான் நண்பர்களாக அடைந்த இடம்' என சொல்லிக்கொண்டே வந்தான்.
பரத்துவாஜ ஆசிரமத்தில் தங்கி, அங்கிருந்து குகனுக்கும், பரதனுக்கும் செய்தி அனுப்பினர்.
அயோத்தி நகரமே..ராமன் வருகைக் கண்டு விழாக்கோலம் பூண்டது.பரதனைச் சேர்ந்து விட்டான் ராமன்.
ராமன் திரும்பி வரும்வரை பதினான்கு ஆண்டுகள் அண்ணன் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து அரசாண்டான் பரதன்.இப்போது ராமன் பட்டபிஷேகம் கண்டு மனம் மகிழ்ந்தான்.
சீதை, ராமன் கையிலிருந்த முத்துமாலையை வாங்கி , அதை ஹனுமானின் கழுத்தில் போட்டாள்.
@@@@@@@@@@@@@@@@@
வால்மீகி ராமாயணத்தை , என்னால் முடிந்த அளவிற்கு எளிமைப் படுத்தித் தந்துள்ளேன்.கம்பன், இதிலிருந்து பல இடங்களில் சற்றே மாறுபடுமாறு, நம் மக்களுக்கு ஏற்றபடியும்..அதே நேரம் சுவை குன்றாமலும் சொல்லியுள்ளான்.
மகாபாரதத்தை எளிமைப் படுத்தி வலைத் தளத்தில் எழுதிய எனக்கு..ராமாயணத்தையும் எழுத வேண்டும் என ஏன் தோன்றியது எனத் தெரியவில்லை.
எழுதி முடித்ததும் ஒரு திருப்தி ஏற்பட்டதை மறுப்பதற்கோ..மறைப்பதற்கோ நான் விரும்பவில்லை.
அனைவருக்கும் என் நன்றி.
No comments:
Post a Comment